முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜூலை கலவரம், யாழ். நூலக எரிப்பு போன்ற சம்பங்கள் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே கைதுசெய்திருக்க வேண்டும்.
தற்போது நடந்த விடயம் சிறிய பிரச்சினை தான் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பற் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையானது ஒரு அரசாங்க பழிவாங்கல் அல்ல. நாட்டுமக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு அமைய நாங்கள் மக்களுக்கு
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே அது இடம்பெற்றது.
இதுவரை காலமும் இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு மாத்திரமே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், எமது ஆட்சியில் யார் எவர் என்ற தராதரம் பாராது, அனைவருக்கும் சமமான வகையில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
தற்போது இதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் குப்பைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளன. ஆனால் அவர்களால் அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. தேர்தலில் நின்று வெற்றிபெறமுடியாதவர்கள், மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களே இன்று, ஒன்று சேர்ந்துள்ளனர்.
ரணிலின் காலத்திலேயே யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்றது. அந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் வவுனியா, செட்டிகுளம் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தார்கள். அத்துடன் பட்டலந்தை அறிக்கை தொடர்பாக அனைவருக்கும் தெரியும்.
எனவே, அந்த காலப்பகுதியில் தான் இவரைக் கைதுசெய்திருக்க வேண்டும். இது சின்ன விடயம்தான். ஆனால் எதிர்காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி ஊழல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
ஊழல்வாதிகள், அரச பணத்தை மோசடி செய்தவர்கள் மீது தொடர்ச்சியாக சட்டம் பாயும். பொலிசார் சுதந்திரமான வகையில் தங்களது கடமைகளைச் செய்வதற்கான சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் அரசு என்றவகையில் பொலிசாருக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் வழங்கவில்லை என அவர் தெரிவித்தார்.